1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகம் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் கொடுத்த 'அப்டேட்'

1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகம் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் கொடுத்த 'அப்டேட்'

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 1 முதல் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாநில வள மையம் (State Resource Centre) உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறை கற்றலுக்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறை கற்றல் உத்திகளை காட்சிப்படுத்துவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்டவை இந்த மாநில வள மையத்தின் முதன்மை நோக்கமாகும்.

மேலும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடப்பொருள் சார்ந்த அறிவினை பெறும் வகையில் மொழி ஆய்வகம், கணிதம் - அறிவியல் - சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தனித்தனி அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, கணக்கீட்டு சார் சிந்தனையை செழுமைப்படுத்தும் அரங்கு, மாணவர்கள் சோதனைகளை செய்து பாடப்பொருள் சார்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ‘கற்க கசடற’ என்ற பெயரில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்கள் பல்வேறு வகையான பாடத்திட்டங்களை மகிழ்ச்சியாக கற்க வேண்டும். இதற்காகவே இந்த மாநில வள மையம் திறக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பயமில்லாமல் பாடம் கற்க உதவும். மேலும், குழந்தைகள் வாழ்க்கை பாடத்தின் மூலம் அனைத்தையும் கற்க வேண்டும் என்பதற்காகவும், AI உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் மூலம் பாடத்தை கற்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி, ஆசிரியர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்து ஆய்வு செய்யவும், அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் பிற ஆசிரியர்களுக்கும் சொல்லித் தரும் வகையில் வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி அமைக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பல்வேறு ஆய்வுகளைப் படிக்கவும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் உதவும் வகையில் அமைத்துள்ளோம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு கல்விக் கொள்கையின் படி, மாநில வள மையத்தில் மாணவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் புதிய புத்தகம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ளது போல் வள மையம் அமைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக மாணவர்கள் கல்வியியல் பின் தங்கியுள்ளனர் என்ற ஆளுநரின் விமர்சனத்திற்கு, “மத்திய அரசே தமிழ்நாட்டை பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது” எனத் தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு, “பகுதி நேர ஆசிரியர்களை எப்படி நிரந்தர பணியில் அமர்த்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடந்தி வருகிறோம். பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று சட்டரீதியாக ஆலோசனை நடைபெற்றது. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களை அப்படியே விட்டு விட மாட்டோம். பகுதி நேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.