ம.பி.யில் சாலையில் நடனமாடியபடி சிக்னல் கொடுத்த தலைமை காவலர் பதவி இறக்கம்
சாலையில் மைக்கேல் ஜாக்சன் போல் நடனபாடி சிக்னல் கொடுத்த மத்திய பிரதேச போக்குவரத்து தலைமைக் காவலர், காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசம் இந்தூரில் பணியாற்றும் போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் சிங். இவர் மைக்கேல் ஜாக்சன் போல் ‘மூன்வாக்’ நடனமாடி சிக்னல் கொடுத்தார். இந்த வீடியோ டி.வி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது குறித்த மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைமைக் காவலராக பணியாற்றிய ரஞ்சித் சிங்கை, காவலராக பதவியிறக்கம் செய்து கூடுதல் துணை ஆணையர் ராஜேஸ் தந்தோத்யா உத்தரவிட்டுள்ளார். ரஞ்சித் சிங் மீது ஒரு பெண் அளித்த புகாரில் ஏற்கெனவே ஒரு விசாரணை நடந்து வருகிறது. சமூகம் ஊடகம் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவருக்கு, தன்னை பார்க்க இந்தூர் வரும்படியும், அதற்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் சிங் மீது ஏற்கெனவே துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையில் நடனமாடி போக்குவரத்து பணியில் ஈடுபட்டதற்காக அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.