லாரி சக்கரத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலி... சென்னையில் சம்பவம்
சென்னையில் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, லாரி சக்கரத்தில் சிக்கி திமுக நிர்வாகி உயிரிழந்தார்.
சென்னை சூளைமேடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மகன் மோகன கிருஷ்ணன்(32). கால் டாக்ஸி ஓட்டுநர். மேலும், திமுக 106-வது வட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் கேசவன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி சென்றார். திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே 100 அடி சாலையில் சென்றபோது, அந்த வழியாக இரும்பு தகடுகளை ஏற்றி வந்து கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்ட மோகன கிருஷ்ணன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், படுகாயம் அடைந்த கேசவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மோகன கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(48) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.