அமெரிக்க சிவில் மோசடி வழக்கு: நோட்டீஸ் பெற அதானி சம்மதம்
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்கு அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் ஆனால் அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாகவும் தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் குழும அதிகாரிகள் மீது அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் எஸ்இசி கடந்த 2024 நவம்பரில் 2 சிவில் மோசடி வழக்குகளை தொடர்ந்தது. கவுதம் அதானி, சாகர் அதானி ஆகிய இருவரும் இந்தியாவில் இருப்பதால், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க முடியாத நிலையில் இவ்விரண்டு வழக்குகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக முடங்கியுள்ளன.
இந்நிலையில் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், எஸ்இசி-யின் சட்ட ஆவணங்களை (நோட்டீஸை) பெற்றுக்கொள்ள அதானிகள் இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு அடுத்த கட்டத்துக்கு செல்ல இந்த மனுவுக்கு நீதிபதி ஒப்புதல் அளிப்பது அவசியமாகும். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டால் அதானிகள் தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவையோ அல்லது பதிலோ அளிக்க 90 நாள் அவகாசம் பெறமுடியும்.
அதன் பிறகு 60 நாட்களுக்கும் எஸ்இசி தனது எதிர்ப்பை தாக்கல் செய்யலாம். இதற்கு அதானிகள் 45 நாளுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யலாம். எஸ்இசி-யின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.