கூட்டணிக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
கூட்டணிக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர், தேவையில்லாத கருத்துகளை பேசி குழப்பம் விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விடக் கூடாது என திமுகவினருக்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி ஸ்டாலின் பேசியதாவது: எல்லாரும் ஓய்வின்றி தேர்தல் பணிக்குத் தயாராக வேண்டும்.
ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களைக் கூறியிருக்கிறோம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திண்டாடுகின்றன.
அதனால் வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்கிறார்கள். இதற்கு நாம் இடம் தரக் கூடாது. தேர்தல் நெருங்கிவிட்டது. இனி நம் சிந்தனை, செயல் எல்லாவற்றுலும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்.
ஏதேனும் தவறு நடைபெற்றால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தனிநபரைவிட கட்சி தான்பெரிது. எல்லாரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உட்கட்சி பிரச்சினைகள் ஏதும் எழக்கூடாது.
மக்கள் குறைகளை சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். நம்கூட்டணிக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர், தேவையில்லாத கருத்துகளை பேசி, குழப்பம் விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக் கூடாது. கூட்டணி- தொகுதி பங்கீடு-இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
100 சதவீத உழைப்பைத்தர வேண்டும். இந்தியாவிலேயே பாஜக வுக்கு சவாலாக இருப்பது திமுகதான். எனவே நம்மை வீழ்த்த பல்வேறு சதித் திட்டங்கள் நடக்கும். அவற்றை உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டுமெனில் அடுத்த 3 மாதத்துக்கு உழைப்பு, பொறுமை அவசியம். இவ்வாறு பேசினார்.
மேலும் வீடு, வீடாக பெண்களை கொண்டு பரப்புரை மேற்கொள்ளுதல், வாக்குச்சாவடி குழுவுக்கான பயிற்சி மாநாட்டை நடத்துதல், தேர்தலுக்கான மாநாட்டை திருச்சியில் மார்ச் 8-ல் நடத்துதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.