‘திரைத்துறையில் 8 மணி நேர வேலை’ - என்ன சொல்கிறார் சவுரப் சுக்லா?
இந்தி நடிகரும் இயக்குநருமான சவுரப் சுக்லா, கமலின் ‘ஹேராம்’ படம் முலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அந்நியன், தில்லுக்குத் துட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ‘பிண்டியா கே பாகுபலி 2’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
அமேசன் பிரைமில் வெளியாகியுள்ள இத்தொடரின் புரமோஷனில் கலந்து கொண்ட அவரிடம் திரைத்துறையில் 8 மணி நேர வேலை பற்றிய விவாதம் அதிகரித்து வருவது பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ஒரு வேலையில் நீங்கள் முழுமையாக மூழ்கி இருக்கும்போது, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கூடுதலாகச் சென்றாலும் அதைப் பற்றி நினைக்க வேண்டாம். அந்த தொடர்ச்சியான சிந்தனை ஓட்டத்தில்தான் மிகச் சிறந்த படைப்புகள் உருவாகின்றன.
நேர வரம்பு இருக்கலாம். ஆனால் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, ‘இது வீட்டுக்குப் போகும் நேரம்’ என்று நினைப்பதை விட, நீங்கள் உருவாக்கும் படைப்பின் தரமே முக்கியம். இசைத்துறையில் இன்று படைப்பாளிகளை விட படைப்பாற்றல் இல்லாதவர்கள் அதிக அதிகாரம் பெற்றுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பற்றி கேட்கிறார்கள்.
இந்த விஷயத்தைத் தனிப்பட்ட முறையில் அணுக விரும்பவில்லை. 3 வகையான உரையாடல்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒன்று, மனிதர்களைப் பற்றிப் பேசுவது. மற்றொன்று, நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவது, இன்னொன்று, கருத்துகளைப் பற்றிப் பேசுவது. நான் 3-வது வழியைத் தேர்ந்தெடுப்பேன். மனிதர்களைப் பற்றிப் பேசாமல், கருத்துகளைப் பேசலாம்” என்றார்.