ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லேக் கார்ஜெல்லிகோவில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தை மீட்புப் படையினர் வந்தடைந்தபோது அங்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூன்று பேர் சடலமாக கிடந்தனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கு மாறும், அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் குறுஞ்செய்திகள் மூலம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 14-ம் தேதி சிட்னியில் ஹனுக்கா பண்டிகையின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்தின் நினைவாக நேற்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆஸ்திரேலிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.