பாடகி ஜானகியின் ஒரே மகன் உடல்நலக் குறைவால் மரணம்... அதிகாலையில் நடந்த சோகம்!

பாடகி ஜானகியின் ஒரே மகன் உடல்நலக் குறைவால் மரணம்... அதிகாலையில் நடந்த சோகம்!
பிரபல பாடகி ஜானகியின் வீட்டில் துயரம் நடந்திருக்கிறது. அவரின் ஒரே மகன் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
சிங்கார வேலனே தேவா.. பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது. இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார்.
1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை மணந்த ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் உள்ளார். முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது ஐதராபாத்தில் மகன் உடன் ஜானகி வாழ்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி மரணமடைந்திருக்கிறார். கடந்த சில நாட்களாகவே முரளி உடல்நலம் குன்றியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாடகி கே.எஸ்.சித்ரா சமூக ஊடகங்களில் அவரின் மரண விவரங்களை வலைதளங்களில் தெரிவித்து, "எங்கள் அன்பு ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளியின் திடீர் மரணத்தால் நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டோம். இந்தத் தாங்க முடியாத துயரத்தையும் சோகத்தையும் சமாளிக்க கடவுள் ஜனகம்மாவுக்கு மகத்தான பலத்தைத் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். முரளியின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.