முதல் டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.
இதில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய சஞ்சு சாம்சன் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களைக் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டிம் ராபின்சன் -கிளென் பிலீப்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராபின்சன் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பிலீப்ஸ் தனது அரைசத்தை பதிவு செய்தார். அதன்பின் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 78 ரன்களில் கிளென் பிலீப்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் 39 ரன்களில் நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் தூபா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.