ஜாமீன் கோரி தேவநாதன் மீண்டும் மனு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன், ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் நிதி’ நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவன இயக்குநரான தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் அந்த தொகையை செலுத்தவில்லை என்பதால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
அதையடுத்து தேவநாதன் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் சரணடைந்து சிறைக்கு சென்றார். இந்நிலையில் தனக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதாகவும், இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பி்ல், தேவநாதனுக்கு சொந்தமான சொத்துகளை அடையாளம் காண வேண்டும் என்பதால் இந்த வழக்கில் அவகாசம் அளிக்க வேண்டுமென கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் போலீஸார் 2 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.