இந்தியா - நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் நாக்பூரில் இன்று இரவு நடைபெறுகிறது.
டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்க உள்ளதால் தற்போது நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாக அமையக்கூடும். இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர், கடந்த 2024-ம் ஆண்டில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் இந்திய அணி 72 சதவீத வெற்றிகளை குவித்துள்ளது.
ஆனால் தனிப்பட்ட வகையில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் செயல் திறன் சிறப்பான வகையில் இல்லை. ஸ்டிரைக் ரேட், ஃபார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் தற்போது சூர்யகுமார் யாதவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர், கணிசமான அளவில் ரன்கள் குவித்தாக வேண்டும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 25 டி 20 ஆட்டங்களில் விளையாடி 18-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் அபிஷேக் சர்மாவின் அதிரடி தொடக்கம், நடு ஓவர்களில் வருண் சக்ரவர்த்தியின் சுழல் முக்கிய பங்கு வகித்திருந்தது. கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 19 ஆட்டங்களில் விளையாடி 218 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அவரது ஸ்டிரைக் ரேட் 123 ஆக இருந்தது. திலக் வர்மாவை 3-வது வீரராககளமிறக்க செய்துவிட்டு சூர்யகுமார் 4-வது இடத்தில் களமிறங்கியதும் அவரது பேட்டிங் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
மேலும் பல்வேறு அணிகளின் பந்துவீச்சாளர்கள் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்யும் தந்திரங்களை கற்றுக்கொண்டுவிட்டனர். கடினமான லெந்த்தில் நேராக வீசப்படும் பந்துகளால் சூர்ய குமார் யாதவை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். இதில் இருந்து சூர்யகுமார் யாதவ் மீண்டுவருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
திலக் வர்மா காயம் காரணமாக விலகி உள்ளதால் அவரது இடத்தில் இஷான் கிஷன் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலேயே தொடர்ந்து விளையாடக்கூடும். அவருக்கு அடுத்தப்படியாக பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கக்கூடும். டி 20 உலகக் கோப்பை தொடருக்குள் திலக் வர்மா முழு உடற்தகுதியை பெறாவிட்டால் அவரது இடத்தை ஸ்ரேயஸ் ஐயர் நிரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிடைக்கு வாய்ப்புகளை ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள முயற்சிக்ககூடும்.