“டி20 உலகக் கோப்பையில் விளையாட விரைவில் எங்கள் அணி இந்தியா பயணிக்கும்” - கிரிக்கெட் ஸ்காட்லாந்து
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு விரைவில் பயணிக்கும் என கிரிக்கெட் ஸ்காட்லாந்து சிஇஓ ட்ரூடி லிண்ட்ப்ளேட் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்க தங்கள் அணியை அழைத்த ஐசிசிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களால் இந்தியா பயணிக்க முடியாது என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேசம் தெரிவித்தது.
மேலும், வங்கதேச அணியின் இடமாற்ற கோரிக்கையை பரிசீலிக்க ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. அதில் வங்கதேச அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என வங்கதேச அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது. இதனால் இப்போது ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது.
எங்கள் அணி வீரர்கள் அண்மைய காலமாக அடுத்தடுத்த தொடர்களில் விளையாடும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது எங்கள் அணியின் இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் இந்திய கள சூழலுக்கு ஏற்ப விளையாட தங்களை தயார் செய்து கொள்ள எங்கள் வீரர்களுக்கு இது உதவும்” என கிரிக்கெட் ஸ்காட்லாந்து சிஇஓ ட்ரூடி லிண்ட்ப்ளேட் தெரிவித்துள்ளார்.