ஷஃபாலி வர்மா அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹாசினி பெரேரா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அத்தபத்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹாசினி பெரேராவும் 22 ரன்னில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஹர்சிதா சமரவிக்ரமா 33 ரன்களை எடுத்த நிலையில் மற்ற வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் வைஷ்ணவி ஷர்மா மற்றும் ஸ்ரீசாரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளி அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாட, மறுபக்கம் ஸ்மிருதி மந்தனா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 69 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஷஃபாலி வர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.