ஆந்திர முதல்வர் சந்திரபாபு தொகுதியில் இ-சைக்கிள் விநியோகத்தில் கின்னஸ் சாதனை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் 2-ம் நாளான நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மூத்த குடிமகன்கள் (வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும்), கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம், கடும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.15,000 என ஒவ்வொரு மாதமும் சரியாக 1-ம் தேதி வழங்கப்படுகிறது.
இதில் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கு நேரில் இந்த உதவி தொகையை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கினார்.
அதன் பின்னர், குப்பம் தொகுதி சாந்திபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மொத்தம் 5,555 இ-சைக்கிள்களை வழங்கினார். அப்போது சந்திரபாபு, மகளிர் உட்பட அனைவரும் சுமார் 3 கி.மீ தூரம் பொதுக்கூட்ட மேடை வரை சைக்கிளில் வந்தனர். 5555 இ-சைக்கிள்கள் விநியோகம், 3 கி.மீ. தூரம் வரை அனைவரும் அதனை ஓட்டியபடி வந்தது என்பது கின்னஸ் சாதனை என கூறி, அங்கிருந்த கின்னஸ் புத்தக பிரதிநிதிகள் அதற்கான சான்றிதழை வழங்கினார்.