4-வது டி20: நியூசி, இந்திய அணிகள் இன்று மோதல்
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி விசகாப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரை 3-0 என இந்திய அணி தன்வசப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. 3-வது போட்டியில் 154 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 10 ஓவர்களில் வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்களை விளாசி மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 56 ரன்கள் விளாசியிருந்தார். இஷான் கிஷனும் தனது பங்குக்கு 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார்.
இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் நடப்பு தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அவர் முறையே 10, 6, 0 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். டி 20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் அவரது பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் விளையாட முடியும். இதனால் அவர், பார்முக்கு திரும்புவதற்கு இன்றைய ஆட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
இதுஒருபுறம் இருக்க இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நடப்பு தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 3 ஆட்டங்களிலும் கூட்டாக 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார். அதேவேளையில் ஓவருக்கு சராசரியாக 9.5 ரன்களை தாரைவார்த்துள்ளார்.
குவாஹாட்டி போட்டியில் 3 ஓவர்களை வீசி 32 ரன்களை வழங்கியிருந்தார். எனினும் அந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா, ரவி பிஷ்னோய், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நேர்த்தியாக செயல்பட்டதால் நியூஸிலாந்து அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. குல்தீப் யாதவ், சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் கவனம் ஈர்க்கத் தவறியிருந்தார். அந்தத் தொடரில் அவர், ஓவருக்கு சராசரியாக 7.28 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
அதேவேளையில் 3-வது ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வருண் சக்ரவர்த்தி முதல் இரு ஆட்டங்களிலும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 72 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் வழங்கியிருந்தார். முக்கியமான தருணங்களில் வருண் சக்ரவர்த்தி மாயாஜாலங்கள் நிகழ்த்தவில்லை. எப்போதுமே நடு ஓவர்களில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படவில்லை.
இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் பட்சத்தில் வருண் சக்ரவர்த்தி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். இது ஒருபுறம் இருக்க டி 20 உலகக் கோப்பை தொடருக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும். இது நிகழும் பட்சத்தில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஜோடி இணைந்து நியூஸிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
ரவி பிஷ்னோய் கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அக்சர் படேல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகமே. இதேபோன்று ஜஸ்பிரீத் பும்ராவுக்கும் இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கக்கூடும். பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் டேரில் மிட்செல் இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டரில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நேரம்: இரவு 7
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோஸ்டார் செயலி