சிகரெட், பான் மசாலா வரி இன்று முதல் அமல்
சிகரெட், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால், செஸ் வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிகரெட், பான் மசாலாவுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பீடிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க ஏதுவாக மத்திய கலால் திருத்த சட்ட மசோதா 2025 நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதேபோல புகையிலை பொருட்கள் மீது புதிய செஸ் வரி விதிக்க ஏதுவாக, சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, புகையிலை, வாசனை புகையிலை, குட்கா பேக்கிங் இயந்திரங்கள் விதிகள் 2026 என்ற அரசாணையை மத்திய நிதியமைச்சகம் கடந்த டிசம்பரில் வெளியிட்டது. இந்த புதிய விதிகள் மற்றும் சிகரெட், பான் மசாலா தொடர்பான வரி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனால் சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான விலை உயர உள்ளது.
இது தொடர்பாக தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பேக்கிங் செய்யும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்களை பொருத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஆலையில் எவ்வளவு சிகரெட், பான் மசாலா தயாரிக்கப்படுகின்றன என்பதை மிகத் துல்லியமாக அறிய முடியும்.
சிகரெட், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால், செஸ் வரி காரணமாக அவற்றின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்பட உள்ளது. சாதாரண சிகரெட்டுக்கு (65 எம்எம்) ரூ.2.05, நடுத்தர சிகரெட்டுக்கு (70எம்எம்) ரூ.4, பிரிமியம் சிகரெட்டுக்கு (75 எம்எம்) ரூ.5.4 கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் சிகரெட்டுகளின் விலை உயரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.