ஆளுநர் இனியாவது அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - திருமாவளவன் 'நறுக்'!

ஆளுநர் இனியாவது அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - திருமாவளவன் 'நறுக்'!

தமிழ்நாடு ஆளுநர் இனியாவது அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் விசிக சார்பில் வழங்கப்படும்.

உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்.

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உண்மை அறியும் குழு உயிரிழந்தவர்களுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தெரிவிப்பதை விடவும் திமுக மீது குற்றம்சாட்டுவது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராட்டக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கரூர் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட இதை வைத்து அரசியல் செய்கிறாரே தவிர அங்கு நடந்த உண்மை நிலை பற்றி பொது மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடு இல்லை.

விஜய்யோடு பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது நம்பிக்கை. விஜய்யை கருவியாக பயன்படுத்தி திமுக மற்றும் கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வது அவர்களது நோக்கம். குறிப்பாக இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்கின்ற வகையில் விஜயை பயன்படுத்த என்று பாஜக திட்டமிடுகிறது.

அதன் அடிப்படையில் தான் பாஜக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. வலிந்து விஜய்க்கு ஆதரவு தருகிறார்கள். விஜய்யை சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் பாஜகவினர் விட மாட்டார்கள். பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காரணத்தால் தங்கள் பிரதிநிதிகளை வெவ்வேறு முகமூடி அணிந்து களம் இறக்குகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோவிற்கு தடை விதித்தது குறித்து கேட்கிறீர்கள். இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் தடை விதிக்கத் தான் செய்வார்கள். நாம் கட்சி நடத்துகின்றோம். அதற்கான பொறுப்பு நமக்கு இருக்க வேண்டும்'' என்று திருமாவளவன் கூறினார்.