'ஊ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது ஏன்? - மனம் திறந்தார் சமந்தா

நடிகை சமந்தா, மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அடுத்து ராஜ் மற்றும் டிகே இயக்கும் ரக்த் பிரம்மந்த் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயமும் அனைவருக்கும் தெரியும். எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது. விவாகரத்து மற்றும் உடல்நலம் அடிப்படையில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதும் தெரியும். அந்த நேரத்தில் எனக்கு எதிராக சில லட்சம் ட்ரோல்கள் வந்தன. அதில் அவர்கள் விரும்பியபடி தீர்ப்புகளையும் வழங்கினர்.
இருந்தாலும் என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. நான் முழுமையானவள் அல்ல; தவறுகள் செய்யலாம், தடுமாறலாம், ஆனால் சிறப்பாக இருக்க முயற்சிக்கிறேன்.
‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா' பாடலில் ஆடியதுபற்றி கேட்கிறார்கள். அந்தப் பாடலை சவாலாக எடுத்துக் கொண்டுதான் நடித்தேன். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று பார்க்க விரும்பியதால் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சவால். என்னை எப்போதும் நான் கவர்ச்சியானவராக கருதவில்லை.
யாரும் எனக்கு ‘போல்டான’ வேடங்களைத் தர மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அதை ஒரே ஒரு முறை அனுபவமாக எடுத்துக் கொண்டு நடித்தேன். எனக்கு நிறைய லட்சியங்கள் இருக்கின்றன. லட்சியம் என்பது ஒரு நோக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும். கட்டுப்பாடின்றி ஓடக் கூடாது” என்றார்.