“டி20 உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது விசித்திரமானது” - மனம் திறக்கும் ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட், டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்கள் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. முன்னதாக 2007-ம் ஆண்டு ரோஹித் சர்மா இடம் பெற்றிருந்த இந்திய அணியும் டி 20 உலகக் கோப்பை தொடரில் வாகை சூடியிருந்தது.
இதுவரை 9 முறை டி 20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இவை அனைத்திலும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 7-ம் தேதி டி 20 உலகக் கோப்பை தொடரின் 10-வது பதிப்பு இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தொடக்க நாளில் அமெரிக்காவுடன் மோத உள்ளது. இந்தத் தொடரை முதன்முறையாக 38 வயதான ரோஹித் சர்மா வெளியே அமர்ந்து கண்டுகளிக்க உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்க்க உள்ளேன். நிச்சயம் இது விசித்திரமாக இருக்கும். ஏனெனில் டி 20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் நான் பங்கேற்றுள்ளேன்.
அந்த வகையில் முதன்முறையாக வீட்டில் அமர்ந்து போட்டியை காண்பது வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், நான் மைதானத்தில் எங்கோ இருப்பேன். ஆனால் அது ஒரே மாதிரியாக இருக்காது. வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
உலகக் கோப்பை தொடர்களுக்கு முன்னதாக வீரர்கள் தேர்வு விஷயங்களில் கடினமான முடிவுகளை எடுத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. தேர்வு விஷயத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் ஒரு முடிவு ஏன் எடுக்கப்படுகிறது என்பதை தனிப்பட்ட வீரர் அறிந்து கொள்வது முக்கியம்.
2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் தேவை என கருதினோம். இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதி லாக தீபக் ஹூடாவை தேர்வு செய்தோம்.
எங்களைப் பொறுத்தவரை, அணியில் உள்ள 15 வீரர்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். வீரர்கள் தேர்வில் உங்களிடம் சரியான காரணம் இருந்து அதை விளக்கினால் போதும்.
கடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் சுமார் 80 முதல் 90 சதவீதம் பேர் அப்படியே உள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடி வருகின்றனர், இது அணிக்குள் வலுவான புரிதலை உருவாக்கும்.
உலகக் கோப்பையை நோக்கிச் செல்லும்போது, அதை வெல்வதுதான் ஒரே குறிக்கோள். அதற்கு, உங்களுக்கு வெளிப்படையான உரையாடல்கள் தேவை, சில சமயங்களில் கடினமான உரையாடல்களும் தேவை. இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.