உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்களில் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம், ‘நிறம்’. நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. சான்டானியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கிருஷ்ண பலராம் இயக்கியுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்சர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிக்கிறது. இதன் இணைத் தயாரிப்பாளர் பி.ராஜேஷ்.
இப்படம் பற்றி கிருஷ்ண பலராம் கூறும்போது, “பச்சோந்தி போல் மாறும் மனிதர்களின் பல்வேறு நிறங்களைக் குறிக்கும் வகையில் ‘நிறம்’ என்று தலைப்பு வைத்துள்ளோம். சிறிய படமாகத் தொடங்கி இன்று பெரிய பட்ஜெட்டில் நிறைவடைந்துள்ளது. இதன் கதை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் பன்மொழிப் படமாக உருவாக்கி இருக்கிறோம். மருத்துவமனை மற்றும் கல்லூரியைச் சுற்றிய கதையாக அமைந்துள்ளது.
ஒரு குற்ற வழக்கில் தொடர்புப்படுத்தப்படும் நாயகன், சதி வலைகளைத் தகர்த்தெறிந்து திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணர்வது கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டுள்ள இந்த கதைக்கு அதற்கேற்ற நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘டிஷ்யூம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பின்னர் இங்கிலாந்து சென்று விட்ட சான்டானியோ டெர்சியோ, இக்கதையை கேட்டவுடன் இந்தியா வந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளார். இதுவரை படம் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர்” என்று தெரிவித்தார்