8-வது ஊதியக் குழு அறிவிப்பு... மத்திய அரசு ஊழியர்களுக்கு ஐாக்பாட் எப்போது?
8-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றம் குறித்து பரிந்துரைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு 7-வது ஊதியக் குழு தொடர்பான ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கியது. தொடர்ந்து ஆணையத்தின் தலைவர், பகுதி நேர உறுப்பினர், செயலாளர் நியமிப்பதில் கால தாமதம் ஆனதால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஊதியக் குழு பரிந்துரைக்காக காத்திருந்தனர். இந்நிலையில், நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் தங்களின் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்குவார்கள். அந்த அடிப்படையில், வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதனிடையே, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள்.
மேலும், மாநில அரசுகள் இந்த பரிந்துரைகளை முழுவதும் ஏற்றுக்கொள்வதில்லை, இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்கின. அதே போன்று தற்போதும் மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.