தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்த மகன்... திருமணமாகாத விரக்தியில் கொடூர முடிவு
சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஜுபாவதி (70). இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், தனது 40 வயது மகன் பிரபுவுடன் வசித்து வந்தார். பிரபுவுக்கு இன்னும் திருமணமாக வில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், இவர்களது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர், ஜூபாவதியைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கதவைத் தட்டி யும் பதில் இல்லாததால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், மகாலட்சுமி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, படுக்கையறையில் பிரபு தூக்கில் தொங்கிய நிலையிலும், ஜூபாவதி படுக்கையில் சடலமாகவும் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
பிரபுவுக்கு 40 வயது ஆகியும் திருமண மாகாததால், பிரபு மற்றும் அவரது தாய் விரக்தியில் இருந்து வந்ததாகவும், அதே சமயம், பிரபுவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமை அதிகமாகி கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிரபுவும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.