15 ஆண்டுகளில் 232 யானைகள் உயிரிழப்பு! வனத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?

15 ஆண்டுகளில் 232 யானைகள் உயிரிழப்பு! வனத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?

உலகளவில் யானைகள் அதிகம் வாழும் இடங்களில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தான் ஆசிய வகை யானைகள் அதிகம் வாழ்வதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் கூறுகின்றன. அதே சமயம் கடந்த 15 ஆண்டுகளில் கோவை வனக் கோட்டத்தில் மட்டும் 232 யானைகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு, கடந்த 11 மாதங்களில் மட்டும் 13 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக் கோட்டம் 694 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கோவை வனக் கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் யானை, காட்டுப் பன்றி, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

குறிப்பாக கோவை வனக் கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதும், அதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன. சில சமயங்களில் யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அதே போல இயற்கை மரணம், நாட்டு வெடி, மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் யானைகளும் உயிரிழக்கின்றன. இந்நிலையில் கடந்த 2010 முதல் தற்போது வரையிலான 15 ஆண்டுகளில் 232 யானைகள் உயிரிழந்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணங்கள் என்ன?

வனத்துறை அறிக்கையில், 202 யானைகள் நோய் மற்றும் வயது முதிர்வு போன்ற இயற்கையான காரணங்களாலும், 30 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 2023 ஆம் ஆண்டில் 23 யானைகளும், குறைந்தபட்சமாக கடந்த 2024 ஆம் ஆண்டில் 8 யானைகளும் உயிரிழந்துள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 15 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 13 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் 10 யானைகள் இயற்கை காரணங்களாலும், 3 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகள் இறப்பின் காரணத்தை கண்டறிய உடற்கூராய்வு

இது குறித்து கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோவை வனக் கோட்டத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல வலசை வரும் யானைகளும் அதிக அளவில் வந்து செல்கின்றன. யானைகள் பெரும்பாலும் நோய் மற்றும் வயது முதிர்வு காரணமாக தான் அதிகளவில் உயிரிழந்துள்ளன. நாட்டு வெடி, மின்சாரம் தாக்குதல் போன்ற காரணங்களினால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.

யானைகளின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வன கால்நடை மருத்துவர்களால், உடற்கூராய்வு செய்யப்படுகின்றன. இயற்கைக்கு மாறான காரணங்களினால் யானைகள் உயிரிழக்க நேரிட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடி, மின் வேலி தொடர்பாக அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல மலையோரத்தில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.