மகளிர் உரிமைத் தொகை; விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?

மகளிர் உரிமைத் தொகை; விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாடு முழுக்க, நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றதில், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளையும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் மக்கள் பயன்படுத்தினர்.

குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட ஏராளமான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். நவம்பர் 15ஆம் தேதி வரை நடந்த இந்த முகாம்களில் சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அப்படி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை தற்போது அரசு தொடங்கியுள்ளதாகவும், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

இந்த சரிபார்ப்பு பணியில், விண்ணப்பித்தவர்களின் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் உள்ளிட்டவை மீது மிக கவனமாக ஆய்வு செய்யப்படும் எனவும், அதன் பின்னர் தகுதியான பயனாளர்களின் பெயர் பட்டியல் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் வருமான வரி தாக்கல் செய்வோர் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து, விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது இறுதி கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், தேர்வாகும் பெண்களின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் விதமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டு சோதனை செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி விடுபட்ட மகளிருக்கு, கலைஞர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவு வைக்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.