ஸ்குவாஷ் முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரை: ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற ஸ்பிராட் சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை அனஹத் சிங்கும், ஜப்பானின் சடோமி வத்தனாபேவும் மோதினர். இதில் வத்தனாபே 6-11, 6-11, 11-2, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் அனஹத் சிங்கை வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மாயா, அர்னவ் தோல்வி - ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, அர்னவ் பாப்பர்கர் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
மெல்பர்னில் நேற்று நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 4-6, 1-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்னா புஷ்கரேவா விடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் அர்னவ் 3-6, 4-6 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் விஹான் ரெட்டியிடம் வீழ்ந்தார்.
இந்திய மகளிர் கால்பந்து அணி பயிற்சியாளராக பமீலா நியமனம்: 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு முன்னாள் இத்தாலி அணி வீராங்கனை பமீலா கான்டி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎப்எப்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக பமீலா கான்டி இந்திய அணியினருடன் இணைவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஞ்சி கிரிக்கெட் போட்டி: தமிழ்நாடு அணி வெற்றி - ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிசா அணியை வென்றது. புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 286 ரன்களும், ஒடிசா அணி 148 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 455 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒடிசா அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது அந்த அணி 83.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் சுப்ரான்ஷு சேனாபதி 98, அனில் பரிதா 98 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து தமிழக அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தமிழக வீரர் சோனு யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
பாரா டேபிள் டென்னிஸ்: பவீனாபென் சாம்பியன் - 3-வது தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சென்னை ஐஐடி-யில் நேற்று முன்தினம் தொடங்கியது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 220 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 62 பேர் பங்கேற்றுள்ளனர். மெட்ராஸ் பட்டணம் ரோட்டரி கிளப், சென்னை ஐஐடி, தமிழக டேபிள் டென்னிஸ் சங்கத்தின் பாரா டேபிள் டென்னிஸ் கமிட்டி ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற டபிள்யூஎஸ்04-05 பிரிவு இறுதி ஆட்டத்தில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் 3-0 (11-2, 11-4, 11-4) என்ற செட் கணக்கில் காஜல் மக்வானாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.