தேசிய வேலை உறுதி திட்டம் தொடர்பான முதல்வரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். இதற்கான நிதி பங்களிப்பை குறைக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (MGNREGA) மாற்றாக, விக்ஷித் பாரத் ஊரக வேலை, வாழ்வாதார உறுதி இயக்கம் (VB-G RAM G) என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்கு பிறகு, அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் படி, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன், மாநில செயல்திறன் அடிப்படையில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதிசெய்யப்பட வேண்டும்.
இந்த திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொடர்ந்து பயனடைந்தனர். அவர்களது வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டுக்கு குறையாமல் நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்பட வேண்டும். புதிய நடைமுறையை கைவிட்டு, வேலைக்கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை தொடர வேண்டும். கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பு அளித்து, வேலைக்கான தேவைக்கு ஏற்பமாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
தவிர, புதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும். அதை திருத்தியமைக்க வேண்டும். மேலும், பல்வேறு உள்நோக்கங்களை கொண்டு இத்திட்டத்துக்கு ‘வளர்ச்சி அடைந்த இந்தியா - ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (விபி-ஜி ராம் ஜி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி, இந்த தேசத்துக்கு வகுத்து தந்த கொள்கைகள், வழிகாட்டிய பாதையை எப்போதும் நினைவு கூரும் வகையில் இத்திட்டம் அவரது பெயரிலேயே தொடர வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் பேசினர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.