விழாவுக்கு தாமதமாக வந்த ஷாகித் கபூர், டிப்தி திம்ரி: பாதியில் வெளியேறினார் நானா படேகர்
பிரபல இந்தி நடிகரான நானா படேகர், தமிழில் ‘பொம்மலாட்டம்’, ரஜினியின் ‘காலா’ படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ஷாகித் கபூர், டிப்தி திம்ரி, அவினாஷ் திவாரி, ஃபரிதா ஜலால், ரன்தீப் ஹூடா நடித்துள்ள ‘ஓ ரோமியோ’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார்.
விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள இப்படம் பிப். 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சி 12 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால், சரியான நேரத்துக்கு வந்தார் நானா படேகர். ஆனால், படத்தின் ஹீரோ ஷாகித் கபூரும், ஹீரோயின் டிப்தி திம்ரியும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர்.
இதனால் கோபமடைந்த நானா படேகர், நிகழ்ச்சியிலிருந்து கிளம்பினார். படக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், தனது கைக்கடிகாரத்தைச் சுட்டிக் காட்டி கோபமாக வெளியேறினார்.
பின்னர் இயக்குநர் விஷால் பரத்வாஜ் பேசும்போது, “நானும் நானா படேகரும் 27 ஆண்டு கால நண்பர்கள். இருந்தாலும் இப்படத்தில்தான் முதல்முறையாக இணைகிறோம். இந்த நிகழ்விலிருந்து அவர் வெளியேறியது வருத்தம் தரவில்லை. காரணம், 1 மணிநேரம் வரை காத்திருந்து பின் கிளம்பிச் சென்றதுதான் அவரின் ஸ்டைல். அதுதான் நானா படேகர்” என்றார்.