ரூ.2,200 கோடி லஞ்சப் புகார்: அதானி பங்கு 13% வரை வீழ்ச்சி
அதானி குழுமத்தின் ரூ.2,200 கோடி (265 மில்லியன் டாலர்) லஞ்சப் புகார் தொடர்பாக, கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டுப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான எஸ்இசி கோரியுள்ளது.
கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு சம்மன் வழங்க இந்திய அதிகாரிகளிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று எஸ்இசி தெரிவித்துள்ளது. எனவே, அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக சம்மன் அனுப்ப நியூயார்க் நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக எஸ்இசி தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலால் இந்தியப் பங்குச் சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 13%வரை சரிவைச் சந்தித்தன.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 10.76% சரிந்து ரூ. 1,861.80-க்கும், அதானி கிரீன் எனர்ஜி 13.81% சரிந்து 779.40-க்கும் வர்த்தகமானது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 769.67 புள்ளிகள் சரிந்து 81,537.70-ல் நிறைவடைந்தது. நிப்டி 241.25 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,048.65 புள்ளிகளில் நிலை பெற்றது.