இன்று முதல் 3 நாடுகளில் சுற்றுப்பயணம்… ஜோர்டான் புறப்பட்டார் மோடி
3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக, பிரதமர் மோடி இன்று காலை ஜோர்டான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 18-ம் தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் முதல் பகுதியாக, அவர் ஜோர்டானுக்கு டெல்லியில் இருந்து காலையில் புறப்பட்டுச் சென்றார்.
ஜோர்டானில் இன்றும், நாளையும் பயணம் செய்யும் மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜோர்டானில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து மோடி உரையாடவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவில் 16,17ம் தேதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இது பிரதமர் மோடியின் முதல் எத்தியோப்பியா சுற்றுப்பயணம் ஆகும். அங்கு அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். எத்தியோப்பியா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.
இதையடுத்து ஓமன் சுல்தான் அழைப்பை ஏற்று, 17, 18ம் தேதிகளில் ஓமன் நாட்டில் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இது ஓமனில் அவர் மேற்கொள்ளும் 2வது சுற்றுப்பயணம் ஆகும். அப்போது இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.