அண்ணாமலை விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி!
துணை முதல்வர் உதயநிதி குறித்த அண்ணாமலையின் விமர்சனம் வருத்தமளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஓயாமரி சுடுகாடு எதிரில் உள்ள தில்லையம்மன் படித்துறையில் மீன் வளத்துறை சார்பில் காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி ஆற்றுப்பகுதியில் மீன்களின் வளத்தை பேணி காக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கையை சார்ந்துள்ள இது போன்ற பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் ''டெட் (TET) தேர்வில் ஆசிரியர்களின் முதன்மை பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்களே?'' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''ஆசிரியர் சங்கத்தை சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். பலர் பல்வேறு விதமான கருத்துகளை கூறியுள்ளனர். கூட்டத்திற்கு பின் அவர்களின் கருத்துகளை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டமும், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் என்ன பணி செய்ய முடியுமோ? அதை செய்வோம். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே தமிழக முதல்வர் எடுக்கும் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய நன்மையாக அமையும்'' என்றார்.
துணை முதல்வர் உதயநிதிக்கு ''சப்ஜெக்ட் நாலெட்ஜ்'' இல்லை என அண்ணாமலை கூறியுள்ளாரே? என கேட்டபோது, '' அவர் (அண்ணாமலை) ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். இன்று இளைய சமுதாயம் சார்ந்து பல்வேறு விதத்தில் ஸ்கில் டெவலப்மெண்ட் (Skill Development) சார்ந்து துணை முதலமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளை பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலர் சேர்ந்துள்ளனர் என்றால், அதற்கு அடுத்தகட்டமாக வேலைவாய்ப்பில் கொண்டு போய் அவர்களை அமர வைப்பதற்கு ஸ்கில் டெவலப்மெண்ட் தேவை. 'நான் முதல்வன்' திட்டம் சார்ந்தெல்லாம் அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும்.
திட்டம் கொண்டு வருவதில் மட்டுமல்ல, அதை தொடர்ந்து கண்காணித்து அதற்கு நல்ல ரிசல்ட் அவர் (உதயநிதி) கொடுத்துள்ளார். அதே போல பள்ளி கல்வித்துறை அமைச்சராக நானும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன். நிறைய சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிற ஒரு இளைஞரை இன்னொரு இளைஞர் இது போல சொல்வது வருத்தமளிக்கிறது'' என்றார்.
10 பேர் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளாரே? என கேட்டபோது, ''இன்னொரு 4 மாதத்தில் இது தெரிந்து விடும். நான் ஆரம்பத்தில் இருந்து கூறியது போல தான்... 10 பேராக மட்டுமல்ல, 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் தொடர்ந்து கொண்டுள்ளோம். அதில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா? என பலர் ஏங்கி வருகின்றனர். அதற்கான வழி வகை ஏற்பட தமிழக முதல்வர் விடமாட்டார்'' என்றார்.