பாஜகவின் சி டீம் தான் விஜய் - அமைச்சர் ரகுபதி ஓபன் டாக்!
பாஜகவின் சி டீம் விஜய். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்றைக்கு அரசியலுக்கு வந்துள்ளார்கள் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கிப்பட்டி, ஆலங்குடி, கொத்தமங்கலம், விராட்சிலை ராங்கியம், சோத்துப்பாளை, கொப்பம்பட்டி ஆகிய 7 வழித்தடங்களில் 7 புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தவெக ஆச்சர்யகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களது குறி தேர்தல். யாரை கண்டும் அஞ்ச வேண்டியது கிடையாது. எங்களுக்கு போட்டியும் கிடையாது. களத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள் தான். தனிப்பட்ட எந்த விரோதமும் அவர்களிடம் எங்களுக்கு கிடையாது.
தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டும் என்று சொன்னால் 'திராவிட மாடல்' ஆட்சி வந்தால் தான் முடியும் என்பதை இந்த 5 ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம். செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது. பலர் ஏமாற்று வேலைகளை செய்யலாம். எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுபடாது. ஆரம்பத்தில் இருந்து பாஜகவுடைய சி டீம் விஜய் என்று சொல்லியுள்ளேன். ஒரு காலத்தில் அவர்களது ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்," என்றார்.
மேலும் பேசிய அவர், "விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத் தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்திக் கொண்டு வருகிறார். அவர் பேசுவதற்கெல்லாம் நாங்கள் ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும்? 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. காங்கிரஸில் இருந்து எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்துள்ளனர். அதற்கு பிறகும் தவெக - காங்கிரஸ் கூட்டணியா? என்ற கேள்வியே தேவையில்லாதது," என்றார்.
அத்துடன். "அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் வரலாற்றை திராவிடத்தின் வரலாற்றை தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் நடத்திய திருவிழா. இதுகுறித்து சிலருக்கு புரிதல் கிடையாது; அக்கறையும் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பது தான். அதை தவிர தமிழர்களை பற்றியோ, தமிழர்களின் கொள்கையை பற்றியோ, பண்பாட்டை பற்றியோ, கலாச்சாரத்தை பற்றியோ எதைப்பற்றியும் அவர்களுக்கு எந்த விதமான கவலையும் கிடையாது" என்றும் லிஜயை அமைச்சர் ரகுபதி சாடினார்.