தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி
இந்தியா மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என என்சிசி மாணவர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து என்சிசி மாணவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த முகாமை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பு முடிந்ததும், என்சிசி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பிரதமர் பார்வையிடுவது வழக்கம். இந்நிகழ்ச்சி டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு நேற்று சென்ற பிரதமர் மோடி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தன்னம்பிக்கையுடன் கூடிய இளைஞர்கள் இருக்கும் இயக்கம் தேசிய மாணவர் படை. இந்த இயக்கம் இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் உணர்வுள்ள குடிமக்களை உருவாக்குகிறது. என்சிசி மாணவர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
ஒட்டுமொத்த உலகமே, இளைஞர்களை அதிக நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்திய இளைஞர்கள் ஜனநாயக கலாச்சாரம், வேற்றுமையில் ஒற்றுமையை மதிக்கும் குணம், உலகை ஒரு குடும்பமாக கருதும் பண்புகளை பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கு அதிக பலன்களை கிடைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவும் - ஐரோப்பிய யூனியனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கு முன்பு ஓமன், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணில் அடங்கா வாய்ப்புகள் உருவாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.