டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்வோம்: நியூஸி. வீரர் மார்க் சாப்மேன்
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 154 ரன்கள் இலக்கை இந்திய அணி 10 ஓவர்களில் துரத்தி வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்களை விளாசி மிரட்டினார்.
முன்னதாக அவர், 14 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அபிஷேக் சர்மாவுக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது. 4-வது போட்டி நாளை (28-ம் தேதி) விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் குவாஹாட்டி போட்டிக்கு பின்னர் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான மார்க் சாப்மேன் கூறியதாவது:
அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் துடிப்பானதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்தது. அபிஷேக் சர்மா நேரில் விளையாடுவதை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் அவரது சிக்ஸர் அடிக்கும் திறன் எதற்கும் குறைந்தது இல்லை.
அவரது அற்புதமான சிக்ஸர் அடிக்கும் திறமைக்கு பின்னால் ஆக்ரோஷம் மட்டுமல்ல, கூர்மையான விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் திட்டமிடலும் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் அபிஷேக் சர்மா சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். இதுதான் டி 20 கிரிக்கெட்டின் இயல்பு. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரரை கட்டுப்படுத்துவது கடினம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 துறையிலும் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டும்.
பெரிய அளவில் நாங்கள் ரன்கள் குவிக்க பார்க்க வேண்டும். ஆடுகளங்கள் சிறப்பாகவே உள்ளன. எனினும் இந்தியாவில் உள்ள அனைத்து ஆடுகளங்களும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்காது என்பதையும் அறிவோம்.
சில நேரங்களில் ஆடுகளங்களில் பந்துகள் நன்கு சுழலும். இதனால் எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். தற்போது உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறோம். இதைவிட டி 20 உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பான முறையில் தயாராக முடியாது. இந்த தொடரில் அவர்களிடம் இருந்து நாங்கள் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை கற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மார்க் சாப்மேன் கூறினார்.