புயலுக்கு 123 பேர் பலி.. இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
டிட்வா புயல் காரணமாக கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை சமாளிக்க இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை தேதியிட்டு இன்று அதிபர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அதிபர் திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர்களின் தொழிற்சங்கம் அவசரகால நிலையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. நிவாரண உதவிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செயல்முறையை அவசர நிலை பிரகடனம் விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் இன்று (நவம்பர் 29) இலங்கையை விட்டு வெளியேறியது. இதுகுறித்து பேசிய இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் அதுல கருணாநாயக்க, "டிட்வா புயல் இலங்கையிலிருந்து வெளியேறி இந்திய கடற்கரையை நோக்கி நகர்வதை நாங்கள் கவனித்தோம். இருப்பினும், கனமழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய மழை நீடிக்கும்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி இலங்கையில் கனமழை பாதிப்புகளால் 123 பேர் உயிரிழந்தனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.