நாடாளுமன்ற வளாகத்தில் காரில் நாயுடன் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியால் சர்ச்சை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரேணுகா சவுத்ரி தனது காரில் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்தார். அப்போது காரின் முன் இருக்கையில் இருந்த அவரது உதவியாளரின் மடியில் ஒரு நாய் இருந்தது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘விலங்குகளை எவரும் விரும்புவதில்லையா? வாயில்லா ஜீவன் வாகனத்தில் ஏறி விட்டது. இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இது கடிக்கும் பிராணியல்ல. கடிப்பவை நாடாளுமன்றத்தில் வேறு உள்ளன. இதற்கு பாதுகாப்பு தடைகள் இல்லையே. இருந்தால் பின்பற்றலாம்” என்றார்.
பிறகு அவர் வேறு சில பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் வரும் வழியில் ஒரு ஸ்கூட்டரும், காரும் மோதிக் கொண்டன. அங்கு இந்த நாய்க்குட்டி சுற்றித் திரிந்தது. அது சாலையில் அடிபடலாம் என கருதி நான் எனது காரில் எடுத்து வந்தேன். அதை திருப்பி அனுப்பி விட்டேன். இதைப் பற்றி விவாதிப்பதில் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பரவிய இந்த தகவலை கேட்டு எம்.பி.க்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். ரேணுகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
பாஜக மூத்த எம்.பி. ஜெகதாம்பிகா பால் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை போல தெரிகிறது. இங்கு தனது நாயை கொண்டு வருகிறார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் நாடே வெட்கப்படும் வகையில் பதில் அளிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.