புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ மத்திய அரசு உத்தரவு
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு மட்டும் 120 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். சஞ்சார் சாத்தி செயலியை மத்திய அரசு சைபர் பாதுகாப்புக்காக பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளது. இந்த செயலியை புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றும், இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்புக்காக மத்திய அரசு பிரத்தேயகமாக உருவாக்கியுள்ள சஞ்சார் சாத்தி செயலியை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி இந்திய தொலைத்தொடர்புத் துறையின் முயற்சியாகும். இது குடிமக்களுக்கு செல்போன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த ஒரு வெப் போர்ட்டல் மற்றும் செல்போன் செயலியை வழங்குகிறது. இது பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்கவும், மோசடிகளை தடுக்கவும், அரசு தொடர்பான பிற குடிமக்கள் சேவைகளை அணுகவும் அனுமதிக்கிறது.
மோசடி எதிர்ப்பு செல்போன் செயலியை உருவாக்குவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இந்தநிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவை சாம்சங், விவோ, ஓப்போ, ஷாவ்மி நிறுவனங்களுடன் சேர்ந்து ஆப்பிளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.