'விஜய் இஸ் தி ஸ்பாய்லர்' - பாஜக கூட்டத்தில் விமர்சித்த பியூஸ் கோயல்
'விஜய் இஸ் தி ஸ்பாய்லர்' என மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் விமர்சித்தார்.
2026-ல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மைய குழுக் கூட்டம், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் புதிய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது, பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேமுதிக மற்றும் பாமக இதுவரையில் கூட்டணி குறித்து முடிவு செய்யாத நிலையில், அந்த இரண்டு கட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், இணைப் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர் எச்.ராஜா, பொருளாளர் எஸ். ஆர் சேகர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் விஜய தாரணி, மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக மையக் குழுக் கூட்டத்தில் விஜய் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெக இணைய வாய்ப்பு இல்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். அப்போது பியூஸ் கோயல் 'விஜய் இஸ் தி ஸ்பாய்லர்' என விமர்சித்தார். மேலும், விஜய் தலைமையிலான தவெகவுக்கு செல்லும் வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடாத படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்றும் பியூஸ் கோயல் ஆலோசனை கூறினார்.