“நம் முதல்வரும் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்தவர்தான்” - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

நம்முடைய முதலமைச்சரும் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கின்றவர்தான். இன்றைக்கும், இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதலமைச்சர். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “முதலில், இங்கே விருது பெறுகின்ற அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், கைத்தட்டல்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த கலையையும், ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தான், நம்முடைய திராவிட இயக்க தமிழ்நாட்டு தலைவர்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நாடகத் துறையிலும், திரைத் துறையிலும் முத்திரை பதித்தவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நம்முடைய முதலமைச்சரும் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கின்றவர்தான். இன்றைக்கும், இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதலமைச்சர். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார்.
இந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், கலைமாமணி விருதுக்கும், கலைஞருக்கும் இந்த அரங்கத்திற்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே அண்ணன் வாகை சந்திரசேகர் குறிப்பிட்டது போல, சங்கீத நாடக சங்கம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்றியமைத்தவர் நம்முடைய கலைஞர் தான்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியதும் கலைஞர் தான். அதே போல் ஆரம்பத்தில், 'கலா சிகாமணி', என்ற பெயரில் தான் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதை கலைஞர் பெயர் மாற்றம் செய்து “கலைமாமணி விருது” என்று அறிவித்தார்.
1967-ஆம் ஆண்டில், கலைஞர் கலைமாமணி விருதிற்கு சிறந்த வசனகர்த்தாவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் அமைச்சர், முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த அரங்கத்தில் கலைஞர் பெயரைச் சொன்னதும், அவர் எழுந்து, விருது வாங்குவதற்காக மேடைநோக்கி வந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, அந்த விருதை கலைஞரிடம் கொடுக்காமல், விருதுக்கான பதக்கத்தை தன்னுடைய கழுத்திலே போட்டுக் கொண்டார். பிறகு தான், அந்த பதக்கத்தை கலைஞரின் கழுத்தில் அணிவித்தார். கலைமாமணி விருது பெறுவதால், கலைஞருக்கு கிடைத்த பெருமையை தனக்கு கிடைத்த பெருமையாக கொண்டாடினார் பேரறிஞர் அண்ணா .
இங்கே விருதுகளை பெறவிருக்கின்ற கலைஞர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள நான் விரும்புகின்றேன். கலைமாமணி விருதை வாங்குவதால் உங்களுக்கு பெருமை என்று சொல்வதை விட, உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை கொண்டிருப்பதால் நம்முடைய தமிழ்நாட்டுக்கு அது பெருமை என்பதை நான் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
2009ஆம் ஆண்டு, இதே கலைவாணர் அரங்கத்திலே நடந்த நிகழ்ச்சியில், கலைமாமணி விருதுகளை வழங்கிவிட்டு பேசும்போது கலைஞர் இதே மேடையில் பேசியிருக்கிறார், நீங்கள் தேசிய விருதுகளை வாங்கலாம், சர்வதேச விருது பெறலாம். ஆனால், எந்த விருதாக இருந்தாலும் அது ஒரு தாயின் முத்தத்திற்கு ஈடாகாது. இந்த கலைமாமணி விருது என்பது அந்த தாயின் முத்தத்திற்கு ஈடானது என்று கலைஞர் சொல்லியிருக்கின்றார். தாயின் முத்தத்திற்கு நிகரான அந்த கலைமாமணி விருதை தான் இன்றைக்கு முதலமைச்சர் உங்களுக்கு தர இருக்கின்றார்.
இங்கே வந்திருக்கக் கூடிய கலைஞர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய ஒரு வேண்டுகோளை வைக்க நான் விரும்புகின்றேன். உங்களுடைய கலைகளை நீங்கள் உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்”
உதயநிதி ஸ்டாலின் பேசினார்.