''சிங்கம் மாதிரி கர்ஜித்த ராமதாஸை பொம்மை போல மாற்றி விட்டார்கள்'' - வழக்கறிஞர் பாலு
சிங்கம் மாதிரி கர்ஜித்த ராமதாஸை பொம்மை போல மாற்றி விட்டார்கள் என்று அன்புமணியின் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த (அன்புமணி ஆதரவு) வழக்கறிஞர் பாலு சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவே அல்ல. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும், தீர்மானங்களும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது.
இந்தக் கூட்டத்தின் ஒரு சிடி எங்களுக்கு போதும். ஒரு காலத்திலும் இவர்களால் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்புக்கு வரவே முடியாது. இவர்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடிய ஆதாரமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் தரப்பை உரிமையியல் நீதிமன்றத்தை நாட நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவர்களோ இன்னும் செல்லவில்லை. சேலத்தில் இன்று அவர்கள் நிறைவேற்றி இருக்கக் கூடிய தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
பாமக பொதுக்குழு என்று சொல்கிறார்கள். பிறகு அதில் எப்படி பசுமைத்தாயகம் என்ற அமைப்பின் தலைவரை மாற்ற முடியும்? இன்று நடந்தது பொதுக்குழுவா? அல்லது பசுமைத் தாயகம் அமைப்பின் கூட்டமா? பசுமைத் தாயகம் என்பது ஐநா மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சுற்றுச்சூழல், நீர் வளம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஐநா மன்றத்தில் எதிரொலிக்க கூடிய ஒரு அமைப்பாக பசுமைத்தாயகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் தலைவராக சௌமியா அன்புமணி செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இன்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் தலைவரை மாற்றிவிட்டதாகவும், அதன் தலைவராக வேறு ஒருவரை நியமிப்பதாகவும் எப்படி சொல்ல முடியும்? பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரை மாற்ற வேண்டுமானால் பசுமைத் தாயகம் அமைப்பு கூடி தான் மாற்ற முடியும்.
ஒரு செயற்குழுவையும், பொதுக்குழுவையும் எப்படி கூட்ட வேண்டும்? என்ற அடிப்படை அறிவு கூட ஜி.கே.மணிக்கு இல்லை. இன்று நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல. அது ஒரு கேலிக்கூத்து. நெருப்பு மாதிரி இருந்தவர் டாக்டர் ராமதாஸ். சிங்கம் மாதிரி கர்ஜித்தவரை இன்று பொம்மை போல மாற்றி விட்டார்கள். இன்றைக்கு அவரை ஒரு கூட்டத்தில் அமர வைத்து விட்டு அது பொதுக் குழுவா? செயற்குழுவா? என்று கூட தெரியவில்லை. எத்தனை தீர்மானங்களை இன்று நிறைவேற்ற போகிறோம்? என்று கேட்கிறார்.
ஸ்ரீகாந்தி எப்போது கட்சிக்கு வந்தார்? மேடையில் வரிசையாக அவரது மகன்களை அமர வைத்துக் கொண்டிருக்கிறார். அன்புமணி அவரது தம்பியாக இருந்தால் வீட்டில் அவர் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் வைத்து அவரை ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர் எங்கள் கட்சியின் தலைவர். டாக்டர் அன்புமணி 1998 இல் இருந்து பசுமைத் தாயகம் அமைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். பாமகவிற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஸ்ரீகாந்தி எப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தார்? இதற்கு முன்பு ஸ்ரீ காந்தி எங்கே இருந்தார்?
டாக்டர் ராமதாஸ் எனது வாரிசுகள் கட்சிக்கு வர மட்டார்கள் என்று சத்தியம் செய்த காரணத்தால் அன்புமணிக்கு உரிய பதவிக்கு வருவது காலதாமதமானது. அவருடைய அனுபவம் மற்றும் ஆற்றலின் காரணமாக தான் அவருக்கு எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது.
இன்று கூட்டணியை அறிவிக்க போகிறோம் என்று சொல்லி இருந்தார்களே. அதன்படி ஏன் அறிவிக்கவில்லை? டாக்டர் ராமதாசை இதற்கு முன்பு ஜி.கே. மணி இயக்கிக் கொண்டு இருந்தார். இப்போது ஸ்ரீகாந்தியும் சேர்ந்து கொண்டு இருக்கிறார். யாரோ எழுதிக் கொடுப்பதை டாக்டர் ராமதாஸ் படித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன் வார்த்தைக்கு வார்த்தை சின்ன அய்யா.. சின்ன அய்யா.. என பேசிக் கொண்டு இருந்த ஜி.கே. மணி இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அன்புமணி.. அன்புமணி.. என்று ஒருமையில் பேசுகிறார். டாக்டர் ராமதாஸ் அன்புமணியின் மீது எவ்வளவு விமர்சனங்கள் முன் வைத்தும் அன்புமணி அமைதியாக கடந்து செல்கிறார். அன்புமணி பொறுமையாக கடந்து செல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
உலகிலேயே அவரைப் போல சிறந்த மகன் எந்த தந்தைக்கும் அமையமாட்டார். ஜி.கே.மணியை பாமகவில் இருந்து நீக்கிவிட்டோம். பாமகவுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கியதற்கு தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி விட்டார்கள். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியை மாற்றிவிட்டதாக சேலத்தில் இன்று அறிவித்திருப்பது செல்லாது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக சௌமியா அன்புமணி தொடர்கிறார் என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ் ஆதரவு) பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடந்த நிலையில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பல்வேறு விமர்சனங்களுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வழக்கறிஞர் பாலு பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.