ஓடும் ரயிலில் சட்ட கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்; கோவை காவலர் பணியிடை நீக்கம்

ஓடும் ரயிலில் சட்ட கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்; கோவை காவலர் பணியிடை நீக்கம்

ஓடும் ரயிலில் சட்ட கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஷேக் முகமது. இவர் பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று விட்டு கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார். இவரது இருக்கைக்கு அருகே சென்னையில் சட்ட கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவியும் பயணித்துள்ளார்.

இந்நிலையில், அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது காவலர் ஷேக் முகமது தனது பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் காவலரின் செய்கையை வீடியோ பதிவு செய்து உள்ளார். பின்னர் இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அரக்கோணம் ரயில் நிலையம் வந்தவுடன் ஷேக் முகமதுவை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து காவலர் ஷேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவி கூறுகையில், ''கோவையை சேர்ந்த நான் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறேன். வழக்கமான விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து ரயிலில் கோவை செல்வது வழக்கம். அவ்வாறு சனிக்கிழமை ரயிலில் வந்து கொண்டிருந்த போது கூட்டம் அதிகமாக இல்லாத நிலையில், ஆண் நபர் ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே வந்து அமர்ந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. ரயில் அரக்கோணம் அருகே வந்த போது தூங்குவது போல அமர்ந்திருந்த அந்த நபர் தன்னிடம் அத்துமீறி நடந்துக்கொண்டார். இதனை வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால், தன்னுடைய செல்போனில் அவரின் செயல்பாடுகளை வீடியோவாக பதிவு செய்தேன். பின்னர் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புத்துறையினருக்கு செல்போனில் தகவல் அளித்தேன். இதனை அடுத்து காட்பாடியில் அவரை கீழே இறக்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையை சேர்ந்த காவலர் என்பது தெரிய வந்தது.

என்னிடம் அத்துமீறிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது'' என்றார்.