தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. குறிப்பாக மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வது, கூட்டணி தொடர்பான பேச்சுகள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணி பொறுத்தவரை திமுகவில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்டவை உள்ளன. இதில் ஏற்கனவே இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படவில்லை.
கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.
2026 தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் தவெக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனத் தெரிவித்துள்ளார். இதுவரை எந்தக் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. எனவே தவெக தனியாக தேர்தலை சந்திக்குமா? அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா? என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், தனியாக தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி, வேட்பாளர்களை நிறுத்துவதிலும், பாலின சமத்துவத்தைப் பின்பற்றி வருகிறது. அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் அறிவிப்பதை கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சில வேட்பாளர்களை கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடக்கும்போதே அறிவித்து வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது 100 பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில், இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பனின் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
வரும் பிப்ரவரி மாதம் மொத்தம் 234 தொகுதிக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.