வக்கீலை வி.சி.க.,வினர் தாக்கிய சம்பவம்; 10 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் ஏன்?

வக்கீலை வி.சி.க.,வினர் தாக்கிய சம்பவம்; 10 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் ஏன்?

 உயர் நீதிமன்றம் அருகே, வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை விடுதலை சிறுத்தைக் கட்சியினர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பினால், 10 நாட்களை கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் கேள்வியை எழுப்பியது.

சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கி காயப்படுத்தினர்.

அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்தினர். தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தவரை, உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தமிழக பார் கவுன்சிலுக்கு எதிராக, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சரிமாரியாக தாக்குதல் நடத்திய விசிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் கீதாவிடம், சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வழக்கறிஞர் மனு அளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து 10 நாட்களை கடந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் கேள்வியை எழுப்பியது. திருமாவளவன் கூட்டணி கட்சியில் இடம் பெற்று இருப்பதால் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனரா என்ற கேள்வியை அரசியல் கட்சி தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி புகார் மனு அளித்த பிறகு, பல்வேறு கட்ட இழுபறிக்கு பிறகு, திருமாவளவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கறிஞர் ராஜிவ் காந்தி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ராஜிவ் காந்தி புகாரின் பேரில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வழக்கறிஞர் விசிகவினர் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரிக்க, இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், டி.சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

அவர், 'இக்குழு விசாரித்து, உண்மையை கண்டறியும். சம்பவம் குறித்து விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் பார் கவுன்சிலின் பொதுக்குழுவுக்கு அறிக்கை அளிக்கும் என தெரிவித்தார். 'விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கவோ அல்லது நீதி நிர்வாகத்திற்கு ஏதேனும் இடையூறு, குறுக்கீடு ஏற்படுத்துவதையோ, வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்' என பி.எஸ். அமல்ராஜ் தெரிவித்துள்ளார். விசிகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி இருக்கும் நிலையில் வழக்குப்பதிவு செய்யாதது குறித்து நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளானவர் மருத்துவமனையில் சேர்ந்தாலே போலீசார் தேடிச் சென்று வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து விடுவர். ஆனால் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சம்பந்தப்பட்டிருப்பதால், போலீசார் தயங்குவதாக அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் புகார் கூறுகின்றனர்.