எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேருக்கு ஜனவரி 7 வரை சிறை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை, வரும் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து உள்ளது கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சொந்தமான விசைப் படகில் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து முத்துசாமி, பிரபு, முருகன் உள்ளிட்ட 10 பேருடன் படகு உரிமையாளர் ராஜா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 2-ம் தேதி) அதிகாலை நடுக் கடலில் காரைக்கால் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ரோந்துப் பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் வரும் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.