தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகணுமா? 20,378 சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகணுமா? 20,378 சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு!

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வார வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 16 முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன் 5710 சிறப்பு பேருந்துகள் என்று 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு மேற்கண்ட நாட்களுக்கு 6110 சிறப்பு பேருந்துகள் என்று, மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிள் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21 முதல் 23 ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4253 சிறப்பு பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிள் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4600 என, மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள்

சென்னை கிளாம்பாக்கம் (KCBT) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி. செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் (KCBT) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக பேருந்துகள் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.

மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் 16 முதல் 19 ஆம் தேதி வரை தீபாவளி நாட்களில் 8368 தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், சென்னையில் இருந்து 5900 சிறப்பு பேருந்துகள் மற்ற பகுதிகளில் இருந்து 6110 சிறப்பு பேருந்துகள் என, 12010 சிறப்பு பேருந்துகளுடன் 20378 பேருந்துகள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது.

தனியார் வாகனங்கள் தவிர்க்க வேண்டிய வழி

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

வரும் 16 முதல் 19 ஆம் தேதி வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் இயங்கும். அதே போல கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படும். முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பின்னர் இயக்கப்படும் பேருந்துகள்

தீபாவளி பண்டிகைக்கு பிறகு வருகிற 21 முதல் 23 ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் 6726 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 4253 சிறப்பு பேருந்துகளும், சென்னை தவிர்த்து பிற இடங்களுக்கு 4600 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 8,853 சிறப்பு பேருந்துகளுடன் தினசரி இயக்கும் 6276 பேருந்துகளுடன் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால்?

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்து நிலையங்களுக்கு இடையே இணைப்பு பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.