சென்னை எழும்பூர் - ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை: அடுத்த மாதம் பிரதமர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்ப்பு
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல்- கோவை, சென்னை சென்ட்ரல் -விஜயவாடா, எழும்பூர் - திருநெல்வேலி, எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் உட்பட 10-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற விரைவு ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்துகளின் புனித தலமான ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேசுவரத்தை அதேநாள் மதியம் 1.15 மணிக்கு அடையும். இந்த ரயில் தாம்பரத்தில் அதிகாலை 5.50 மணிக்கும், விழுப்புரம் சந்திப்பில் காலை 7.18 மணிக்கும், திருச்சி சந்திப்பில் காலை 9.15 மணிக்கும், புதுக்கோட்டையில் காலை 9.58 மணிக்கும், காரைக்குடி சந்திப்பில் காலை 10.38 மணிக்கும், சிவகங்கையில் முற்பகல் 11.13 மணிக்கும், ராமநாதபுரத்தில் நண்பகல் 12.13 மணிக்கும் நின்றுசெல்லும்.