தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் என்ன உள்ளது? 'சஸ்பென்ஸ்' வைத்த செங்கோட்டையன்!

தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் என்ன உள்ளது? 'சஸ்பென்ஸ்' வைத்த செங்கோட்டையன்!

தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் முக்கியமான சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் கூறியிருப்பது எந்த அடிப்படையில் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "பின்னால் இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள், நல்லதே நடக்கும்” என பதில் அளித்தார்.

இரட்டை இலை சின்னம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அளித்த கடிதம் குறித்த கேள்விக்கு, ”தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியே சொல்லக் கூடாது என விதிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன” என தெரிவித்தார்.

உங்களை பாஜக இயக்குகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ”53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது” என தெரிவித்தார்.

மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு, அது அவருடைய விருப்பம் என பதில் அளித்தார்.

அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, ”கட்சியில் மகன், மைத்துனர் ஆகியோர் மாவட்டம், தொகுதியளவில் தலையிடுகின்றனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது ஊடகத்திற்கு தெரியாதது கிடையாது. இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனிடம் அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா? என்ற கேள்விக்கு, ”அதிமுகவில் யார்? யார்? பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து. ஆனால், உறுதியாக பேச்சுவார்த்தை நடக்கிறது” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து விட்டு சென்றார்.