யாருடன் கூட்டணி? ”தை பிறந்தால், வழி பிறக்கும்” என ஓ.பன்னீர்செல்வம் பதில்

யாருடன் கூட்டணி? ”தை பிறந்தால், வழி பிறக்கும்” என ஓ.பன்னீர்செல்வம் பதில்

அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்றார்.

போடிநாயக்கனூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், ”என்டிஏ கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம், உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை அழைத்த போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து தெரிவித்து வந்தேன்.

எங்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் பிரிந்து இருக்கின்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் அவரும், ஜெயலலிதாவும் செயல்பட்டனர், ஆனால் அந்த சட்ட விதிகள் தற்போது மீறப்பட்டு விட்டன. அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை தொண்டர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே சட்ட விதி, அது இன்று அவ்வாறு இல்லை.

அந்த சட்ட விதிகளை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தான், நாங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி இருக்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளை காப்பாற்றுவதற்கு எங்களது சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அவர் தமிழ்நாட்டிற்கு செய்த புகழை மறைக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அது கடும் கண்டனத்துக்குரியது. தவறு செய்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், அதிமுக தொண்டர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”தை பிறந்தால், வழி பிறக்கும்” என்று பதில் அளித்துவிட்டுச் சென்றார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தயில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்ளப் போகிறார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.