‘அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டும் தப்பித்தேன்’ - பயங்கரமான இரவை நினைவுகூர்ந்த பெண்

‘அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டும் தப்பித்தேன்’ - பயங்கரமான இரவை நினைவுகூர்ந்த பெண்

மும்​பை​ தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்​டபோதும், தப்​பித்த மும்பை பெண் அந்த பயங்கர​மான இரவை நினைவு கூர்ந்​துள்ளார்.

2008-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் 10 பேர் சரமாரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்​டுத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்​டு​கள் நிறைவடைந்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண் தேவிகா, இரவில் நேர்ந்த சம்​பவம் குறித்து கூறிய​தாவது: அந்த பயங்கரமான இரவை மறக்​கவே முடி​யாது. இன்று நினைத்​தா​லும் கூட உடல் நடுங்​கு​கிறது. தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சரமாரியாக சுட்​டனர். என் கண் முன்​னால் ஏராள​மான மக்​கள் உயி​ரிழந்த காட்சி கண்ணை விட்டு அகல​வில்​லை.

அஜ்மல் கசாப்​தான் என்​னைச் சுட்​டார். அதிலிருந்து நான் தப்பித்தேன். அஜ்மல் கசாப் யார் என்று அடை​யாளம் காட்​டு​மாறு போலீ​ஸார் கேட்​டுக் கொண்​டனர். நீதி​மன்​றத்​தில் அவரை நான் அடை​யாளம் காட்​டினேன். அப்போது, சிலர் என்னை தவறாக வழிநடத்த பல முறை முயன்​றனர். சிலர் என்னை குழப்ப முயன்றனர். நீதி​மன்​றத்​தில் அஜ்மல் கசாப் உட்பட 3 பேர் என் முன்​னால் நிற்க வைக்​கப்​பட்​டனர். ஆனால் நான் குழப்​பம் அடைய​வில்​லை.

இவர்​தான் சுட்​டார் என்று தெளி​வாக கசாப்பை அடை​யாளம் காட்டினேன். தாக்​குதலின்​போது அஜ்மல் கசாப் முகத்​தில் எந்த பயமும் இல்​லை. எங்​களைக் கொல்​வது அவருக்கு மகிழ்ச்சி தந்தது போல் அவரது முக​பாவம் இருந்​தது. துப்​பாக்​கி​யால் சுடப்பட்டு தப்​பித்த பின்​னர் அரசு எனக்கு பல்​வேறு வாக்​குறு​தி​களை​யும், நம்​பிக்​கை​யை​யும் அளித்​தது. ஆனால் அதையெல்லாம் மத்​திய, மாநில அரசுகள் மறந்​து​விட்​டன.

பின்​னர் அரசு தந்த உறு​திப்​படி நீதி​மன்​றம் மூலம் எனக்கு வீடு கிடைத்​தது. இதற்கு வழக்​கறிஞர்​கள் உஷா பென்​ஸ், குனிகா லால் ஆகியோ​ருக்கு நன்​றி. இந்த வழக்கு தொடர்​பாக பலர் என்னை ஊடகங்​களில் இருந்து அணுகும்​போது இந்த வீட்​டில்​ இருந்​து​தான் பேட்டி கொடுக்​கிறேன்.

பல வாக்​குறு​தி​களை அரசு மறந்துவிட்டது. அந்த வாக்​குறு​தி​கள் மீது​தான் இன்​னும் அரசு தூங்கிக்​கொண்​டிருக்​கிறது. ஆனால் 17 ஆண்​டு​களுக்கு முன்​னால் எனக்கு நேர்ந்த பயம் இன்​றும் இருக்​கிறது. இவ்​வாறு தேவிகா தெரி​வித்​தார்​.