கேரள நபர் தற்கொலை: பேருந்தில் வீடியோ எடுத்த பெண் மீது வழக்குப் பதிவு
கேரள பேருந்தில் தன்னை ஒருவர் தவறாக தொட்டதாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட நபரை வீடியோ எடுத்து, அவர் மீது குற்றம்சாட்டிய பெண் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் யூ (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அவரின் தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது பாலியல் வரம்பு மீறல் என்றும் ஷிம்ஜிதா குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிறு அன்று தீபக் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்தும், அவர் பற்றி பரப்பப்பட்ட வீடியோ குறித்தும் கேரள காவல் துறை தீவிர விசாரணை நடத்தியது.
காவல் துறையின் விசாரணையை அடுத்து, தீபக் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி ஆன்லைனில் வீடியோ வெளியிட்ட பெண் ஷிம்ஜிதா முஸ்தபா (35) மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று தீபக் தற்கொலை செய்துகொண்ட நிலையில், திங்கள்கிழமை அன்று பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் ஷிம்ஜிதாவின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. தீபக்கின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் புகழுக்காக ஷிம்ஜிதா, தீபக்கின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஷிம்ஜிதா வெளியிட்ட வீடியோ ஆன்லைனில் வெளியான உடனேயே தீபக்கை விமர்சித்து ஆன்லைனில் கடுமையான எதிர்வினைகள் வந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை விசாரணைக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெறவிருக்கும் ஆணையத்தின் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.