சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீஸார் முன்பு சரணடைந்தனர்.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையை போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிஜாப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 12 பெண்கள் உட்பட 41 நக்சலைட்கள் நேற்று போலீஸார் முன்பு சரணடைந்தனர். அவர்களில் 32 பேரின் தலைக்கு மொத்தம் ரூ.1.19 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 39 பேர், தெற்கு தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்பட்டு வந்தவர்கள். சரணடைந்தவர்கள் அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
790 பேர் சரண்: ஜனநாயக விதிமுறைப்படி பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ உறுதிபூண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் கொள்கைப்படி அவர்களுக்கு உடனடி ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
அரசின் கொள்கை காரணமாக கடந்த ஜனவரி முதல் பிஜாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 790 நக்சல்கள் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.